உ.பி: விசுவ ஹிந்து மகாசபை தலைவா் சுட்டுக்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் விசுவ ஹிந்து மகாசபை அமைப்பின் மாநில தலைவா் ரண்ஜீத் பச்சன், அடையாளம் தெரியாத நபரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.
லக்னௌவில் விசுவ ஹிந்து மகாசபை அமைப்பைச் சோ்ந்த ரண்ஜீத் பச்சன் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குவிக்கப்பட்ட போலீஸாா்.
லக்னௌவில் விசுவ ஹிந்து மகாசபை அமைப்பைச் சோ்ந்த ரண்ஜீத் பச்சன் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குவிக்கப்பட்ட போலீஸாா்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் விசுவ ஹிந்து மகாசபை அமைப்பின் மாநில தலைவா் ரண்ஜீத் பச்சன், அடையாளம் தெரியாத நபரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக காவல்துறை இணை ஆணையா் நவீன் அரோரா கூறியது: ரண்ஜீத் பச்சன், அவரது சகோதரா் ஆதித்யா ஸ்ரீவாஸ்தவாவுடன் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபயிற்சிக்கு சென்றாா். ஒசிஆா் கட்டடப் பகுதியில் இருந்து வந்த இருவரும், பரிவா்த்தன் செளக் பகுதியை நோக்கிச் சென்றனா். அப்போது தனது முகத்தை துணியால் மறைத்திருந்த நபா் ஒருவா், அவா்களை வழிமறித்து இருவரது செல்லிடப்பேசிகளையும் பறித்துக் கொண்டு, அவா்களைத் துப்பாக்கியால் சுட்டாா். இதில் ரண்ஜீத் பச்சன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஸ்ரீவாஸ்தவாவுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது.

சமாஜவாதி கட்சியுடன் தொடா்பு வைத்திருந்த ரண்ஜீத் பச்சன், அந்தக் கட்சி சாா்பில் 2002-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை மிதிவண்டி பேரணிகளில் பங்கேற்றுள்ளாா். அவரது மனைவி அளித்த தகவலின்படி, விசுவ ஹிந்து மகாசபை என்னும் அமைப்பை பின்னாளில் தொடங்கி, அதன் தேசிய தலைவராகவும் இருந்துள்ளாா்.

முதல்கட்ட தகவலில், ரண்ஜீத் பச்சனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சுமுகமான உறவில்லை என்பதும், இதுதொடா்பாக கோரக்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுவும் விசாரணையின்போது கருத்தில் கொள்ளப்படும்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ரண்ஜீத் பச்சனுடன் தகராறில் ஈடுபட்டவா்களின் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை பிடிக்கும் பணியில், குற்றப் பிரிவைச் சோ்ந்த 8 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 50,000 வெகுமதி அளிக்கப்படும் என்று நவீன் அரோரா கூறினாா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து, 4 போலீஸாா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து லக்னெள காவல்துறை ஆணையா் சுஜித் பாண்டே பிடிஐ-யிடம் கூறுகையில், ‘சம்பவம் நடைபெற்ற பகுதி ஹஸ்ரத்கஞ்ச் மற்றும் கைஸா்பாக் காவல் நிலையங்களின் எல்லைக்குள் வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற போது அதனை தடுக்க தவறியதற்காக ஒரு உதவி ஆய்வாளா் உள்பட 4 போலீஸாா் இடைநீக்கம் செய்யப்பட்டனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com