அரவிந்த் கேஜரிவாலுடன் விவாதம் நடத்தத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தில்லியில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பேரணியில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
"கேஜரிவால் எங்களை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்படி கூறியிருக்கிறார். மேலும், விவாதம் நடத்தத் தயார் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரத்தையும், இடத்தையும் சொன்னால்போதும். பாஜக உறுப்பினர்கள் அங்கு விவாதிக்க வருவார்கள்.
முதல்வரைப் பொருத்தவரை தில்லி மக்கள்தான் எங்கள் முதல்வர்" என்றார்.
முன்னதாக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கேஜரிவால், "நாளை பகல் 1 மணி வரை பாஜகவுக்கு நேரம் தருகிறோம். அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை அவர்கள் அறிவிக்கட்டும். அப்படி அதற்குள் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டால், அவருடன் விவாதிக்க நான் தயார்" என்றார்.