உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் பாதுகாப்புத்துறைக் கண்காட்சி 2020ஐ பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் யேஷோ நாயக், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதில், பாதுகாப்புத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பத் தீர்வுகள் ஆகியவற்றைக் கொண்டுவரும் விதமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளையும், சேவைகளையும் இந்த கண்காட்சி அரங்கில் காட்சிப்படுத்தியுள்ளன.
இந்தக் கண்காட்சி புதுமையான தொழில்நுட்பங்களை வடிவமைப்பவர்கள், உற்பத்தியாளர்கள், சந்தைப்படுத்துவோர், அரசு மற்றும் பிற பங்குதாரர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளவும், தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.