அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் வரவேற்றுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. மேலும், ராமர் கோயில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை நிறுவுமாறும் கூறியிருந்தது.
இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 'ஸ்ரீராம் ஜன்மபூமி திரத் ஷேத்ரா' என்ற அறக்கட்டளையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயாராக இருப்பதாகவும் மக்களவையில் பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், ராமர் கோயில் கட்டுமானத்திற்கான நம்பிக்கையை உருவாக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, 'அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை வழிவகுத்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், ராமர் கோயில் காட்டும் முடிவு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அதனை செயல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு. அதையே தற்போது மோடி அரசு செய்கிறது' என்று கூறியுள்ளார்.