மேற்குவங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி செல்ல முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
குறிப்பாக கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் சட்டப்பேரவைகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினர் வீடுகள்தோறும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று மேற்கு வங்க மாநிலத்தின் டோலிகஞ்ச்பரி பகுதியில் பாஜகவினர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரவாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தலைமையில் பேரணியாக செல்ல முயன்றனர்.
ஆனால் பேரணியை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.