கர்நாடகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 3 வயது குழந்தையிடம் பெண் ஊழியர் ஒருவர் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் விடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.
கர்நாடகத்தில் கனககிரி தாலுகாவில் குண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர் குழந்தையை மிகவும் முரட்டுத்தனமாக அடிக்கிறார். குழந்தை மையத்திற்கு தாமதமாக வந்ததனால் அவர் குழந்தையை அடிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
குழந்தையின் உறவினர் இதுகுறித்து கூறுகையில், 'அங்கன்வாடி உதவியாளர் ஷரணம்மா பொதுவாகவே குழந்தைகளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார். அவரிடம் ஏற்கெனவே இதுகுறித்து பலமுறை பேசியிருக்கிறோம். குழந்தைகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும்படி கூறியும், அவர் தொடர்ந்து இதுபோல நடந்துகொள்கிறார்' என்று தெரிவித்தார்.
குழந்தைகளின் பெற்றோர்கள் கூறியும் கேட்காததாலே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதனை விடியோ எடுத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த கனககிரி தாலுகா அதிகாரிகள், விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்மந்தப்பட்ட அங்கன்வாடி ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.