இடஒதுக்கீட்டை அழிப்பது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மரபணுவில் உள்ளது என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்தார்.
அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும், பதவி உயா்வில் இடஒதுக்கீடு கோருவது தனி நபரின் அடிப்படை உரிமை அல்ல என்றும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை, அரசியல் சாசன அமா்வு விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால், சட்டத் துறையிடம் கலந்தாலோசித்து விட்டு, அரசமைப்புச் சட்டத்தின் 16(4)(பி) அல்லது(சி) பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கவும், இடஒதுக்கீட்டு முறையை முடிவுக்கு கொண்டுவரவும் பாஜக முயன்று வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தபோது ராகுல் கூறியதாவது,
இடஒதுக்கீடு முறையை அழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் எவ்வளவு கணவு கண்டாலும் அது நிறைவேறாது. ஏனென்றால் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஒருபோதும் விரும்பியதில்லை.
ஒவ்வொரு நாள் விடியலின் போதும் அவர்களுக்கு இது தொடர்ந்து தலைவலியை ஏற்படுத்தி வந்தது. ஆனால், இந்த நடைமுறை நமது ஜனநாயகத்தில் சமூக நீதியைப் பாதுகாத்து வருகிறது. எனவே தான் அதனை அழிக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பல நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்தது. அதிலும் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்று தொடர்ந்து வாதிட்டு வந்தது நாம் அனைவரும் அறிந்தது தான்.
இடஒதுக்கீடு நமது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமான நடைமுறை. ஆனால், அதன் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் குரல்வளை நசுக்கப்படுகிறது. நாட்டின் ஜனநாயகத்தின் முக்கிய அமைப்புகளை மத்திய பாஜக அரசு ஒவ்வொன்றாக தொடர்ந்து அழித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.