புதுச்சேரி: குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக பேரவையில் விவாதிக்கக்கூடாது என்று புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் வருகிற 12ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் நாராயணசாமி முன்னரே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக பேரவையில் விவாதிக்கக்கூடாது என்று புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கிரண் பேடி கூறியுள்ளதாவது:
வரும் 12ஆம் தேதி கூடவுள்ள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக பாஜக எம்.எல்.ஏக்கள் என்னைச் சந்தித்து புகார் கொடுத்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டம் புதுச்சேரி மாநிலத்திற்கும் பொருந்தும்.
அத்துடன் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.