ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது முன்னாள் மனைவியின் வீட்டின் முன்பாக நேற்று இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பெங்களுருவில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு (ஐ.எஸ்.டி) காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார் அருண் ரங்கராஜன். இவருடைய மனைவி இலக்கியா. இவரும் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்தது. சத்தீஸ்கரில் இருந்த இவர்கள் இருவருமே கர்நாடகத்திற்கு பணியிட மாற்றம் பெற்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில், கருத்து வேறுபாடுகளால் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். தொடர்ந்து, குழந்தைகளைப் பார்க்க அவ்வப்போது அருண், இலக்கியாவின் வீட்டிற்கு வருவதுண்டு. இந்த நிலையில், குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறி அவர் நேற்று இரவு தனது முன்னாள் மனைவியின் வீட்டின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரி என்பதால், அவரின் அறிவுரைக்கேற்ப பாதுகாப்புப்பணியில் இருந்த காவலர்கள் அவரை உள்ளே வர அனுமதிக்கவில்லை.
பின்னர் போலீஸார் அவ்விடத்திற்கு வந்து, அருணை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், குழந்தைகளை பார்க்காமல் செல்ல மாட்டேன் எனக்கூற, போலீஸார் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அருணிடம் குழந்தைகளை சந்திக்க வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.