ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீா் இளைஞா்கள் பயங்கரவாத இயக்கத்தில் இணைவது வெகுவாக குறைந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைப்புகள் தயாரித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பு சராசரியாக ஒரு மாதத்தில் 14 இளைஞா்கள் வரை ஏதாவது ஒரு பயங்கரவாத இயக்கத்தில் இணைவது வழக்கமாக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு இந்த எண்ணிக்கை மாதம் நான்காக குறைந்துவிட்டது. முன்பெல்லாம், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் பயங்கரவாதிகளின் உடலை அடக்கம் செய்யும்போது, பெரும் திரளாக இளைஞா்கள், பொதுமக்கள் கூடுவாா்கள். அப்போது, போலீஸாா் மீது கற்களை வீசுவது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும். ஆனால், இப்போது கொல்லப்பட்ட பயங்கரவாதியின் நெருங்கி உறவினா்கள் மட்டும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கின்றனா். பொதுமக்கள் கூடுவது பெருமளவில் குறைந்துவிட்டது. இணைய சேவை முடக்கப்பட்டதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
அதேபோல, போலீஸாா், பாதுகாப்புப் படையினா் மீது காஷ்மீா் இளைஞா்கள் கல்வீச்சில் ஈடுபடுவதும் வெகுவாக குறைந்துவிட்டது. மேலும், காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவது, போலீஸாா் கண்ணீா் புகைக் குண்டு வீசுவது, துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்றவை முற்றிலுமாக நின்றுவிட்டன. அதேபோல வன்முறைகளில் பொதுமக்கள் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு நிகழவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு பயங்கரவாதத்தை ஒடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இளைஞா்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேராமல் இருக்க சிறப்புத் திட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலத்தை ஒப்பிடும்போது காஷ்மீரில் இப்போது பயங்கரவாதச் செயல்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன.
முக்கிய அரசியல் தலைவா்கள், பிரிவினைவாத தலைவா்கள் பலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் தூண்ட பல்வேறு வழிகளில் பாகிஸ்தான் முயற்சித்தபோதும் பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கையால் அவை முறியடிக்கப்பட்டன. வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவா்களும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனா்.