தில்லி பேரவைத் தேர்தலில் மாலை 8.20 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
70 பேரவைத் தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வரும் ஆம் ஆத்மி மாலை 8.20 மணி நிலவரப்படி 62 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆம் ஆத்மி 55 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 தொகுதிகளில் ஆம் ஆத்மி 7 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன.
தில்லியில் ஆட்சியமைக்க 36 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி ஏற்கெனவே 55 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது.
இதன்மூலம், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தொடர்ந்து மூன்றாவது முறையாக தில்லியில் ஆட்சி அமைக்கவுள்ளது.
புதுதில்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கேஜரிவால், பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதையடுத்து, தில்லி மக்கள் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.