தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறவுள்ளதையடுத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவிந்த் கேஜரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே முன்னிலை பெற்று வந்த ஆம் ஆத்மி 63 தொகுதிகளில் முன்னிலை பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. தில்லியில் ஆட்சி அமைக்க 36 இடங்களே தேவை என்ற நிலையில் ஆம் ஆத்மி 63 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதையொட்டி அரவிந்த் கேஜரிவாலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் அரவிந்த் கேஜரிவாலைத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் அரவிந்த் கேஜரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.