புது தில்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா எப்போது வெளியே வருவார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, ஃபரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்து முலாயம் கேள்வி எழுப்பினார்.
வழக்கமாக ஃபரூக் அப்துல்லா எனது அருகே அமருவார். அவர் எப்போது மக்களவைக்கு வருவார் என்று முலாயம் கேட்டார்.
ஆனால், இந்த கேள்விக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தாமல், அடுத்த கேள்விக்குச் சென்றுவிட்டார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஃபரூக் அப்துல்லா 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.