நிர்பயா வழக்கில் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியைப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி

நிர்பயா வழக்கில், நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, சிறை நிர்வாகம் விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியைப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி


புது தில்லி: நிர்பயா வழக்கில், நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, சிறை நிர்வாகம் விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதி மறுத்து, தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தடை விதித்த தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய மற்றும் புது தில்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து பதிலளிக்குமாறு குற்றவாளிகள் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி தலைமையில் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது.

நான்கு குற்றவாளிகளும், சட்ட நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய கால அவகாம் முடிந்துள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனுக்கள் எதுவும், தூக்குத் தண்டனையை நிறைவேற்ற விசாரணை நீதிமன்றம் விதிக்கும் தேதிக்கு முட்டுக்கட்டையாக இருக்காது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மத்திய மற்றும் தில்லி அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த குற்றவாளிகளை மகிழ்ச்சிக்காக தூக்கிலிட வேண்டும் என்று கருதவில்லை, சட்டத்தை நிலைநாட்டுவதே அதிகாரிகளின் கடமை என்று வாதாடினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com