தில்லி மக்களை தான் வணங்குவதாக தில்லியில் ஆம் ஆத்மி முன்னிலை குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி தொடக்கம் முதலே முன்னிலையில் வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் ஆம் ஆத்மி தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது.
இதையொட்டி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டரில், ஆம் ஆத்மி வென்றுள்ளது, பொய்யும், வெற்று சவடாலும் தோற்றுள்ளது.
பாஜகவின் பிரிவினைவாத மற்றும் ஆபத்தான வியூகங்களை தில்லியில் வசிக்கும் இந்தியாவின் பல மாநில மக்கள் தோற்கடித்துள்ளனர். 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் தேர்தலை சந்திக்க இருக்கும் மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தில்லி மக்களை நான் வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.