உ.பி.யில் முன்னாள் ராணுவ வீரரான தந்தையை சுட்டுக்கொன்ற மகள்
உத்தரப்பிரதேசத்தில் மனைவி மற்றும் மகளை சுட்டுக்கொல்ல முயன்ற முன்னாள் ராணுவ வீரர் மகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மித்தவுலி என்ற கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சேத்ராம் சிங். சமீப நாட்களாக இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சேத்ராம் சிங், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது மனைவி மற்றும் 17 வயது மகளை சுட்டுக்கொல்ல முயற்சித்தார்.
தொடர்ந்து, 13 வயது மகனை சுட்டுக்கொன்ற முயன்றபோது, காயமடைந்திருந்த மகள், துப்பாக்கியை பிடுங்கி, தந்தையை சுட்டுக்கொன்றார். இதில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சேத்ராமின் மனைவியும், மகளும் படுகாயங்களுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரது உடல்நிலையுமே கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சேத்ராம் சிங், ஜாட் ரெஜிமென்ட்டில் நாயக்காக பணியாற்றி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
தகவலறிந்த போலீஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மதுரா துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி) ஷலப் மாத்தூர் கூறுகையில், ஒரு துப்பாக்கி, இரண்டு பத்திரிகைகள் மற்றும் மூன்று தோட்டாக்களை சம்பவ இடத்திலிருந்து எடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சேத்ராமின் மகள் அலகாபாத்தில் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வருகிறார். மகன் மதுராவில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது மகள் ஒரு இளைஞர் மீது காதல் கொண்டதாகவும், அதற்கு சேத்ராம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.