கரோனா வைரஸ் பாதிப்பால் கேரளத்தில் சிகிச்சை பெற்று வந்த 3 மருத்துவ மாணவர்களுள் ஒருவர் குணமடைந்ததால் வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஆய்வு நடத்த பிரதமரின் வழிகாட்டுதலின்பேரில் உயர்நிலை அமைச்சர்கள் அடங்கிய இரண்டாவது கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்,
"கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 மருத்துவ மாணவர்களுள் ஒருவர் குணமடைந்ததால், அவர் வீடு திரும்பியுள்ளார். மற்ற இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த பரிசோதனைகளில் வைரஸ் தன்மை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் நல்ல உடல்நிலையில் உள்ளனர். இதிலிருந்து மீண்டு வருகின்றனர். அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள்.
இந்தியாவுக்கு வருகை தரும் 2,315 விமானங்களில் பயணித்த 2.51 லட்சம் பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 645 பேரும், இரண்டு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டு வார காலத்துக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அதன்பிறகு, கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்ட பிறகு, அவர்கள் வீடு திரும்பலாம். பிப்ரவரி 11 வரை கிடைத்த முடிவுகளின்படி, அவர்கள் அனைவரும் நல்ல நிலையிலேயே உள்ளனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவே, அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனர்" என்றார்.