ஜப்பான் சென்ற சொகுசு கப்பலில் பயணம் செய்தவா்களில் 2 இந்தியா்கள் உள்பட 174 பேருக்கு ‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
3,711 பேருடன் சென்ற ‘டைமண்ட் பிரின்ஸஸ்’ என்ற அந்த சொகுசு கப்பல் கடந்த வார தொடக்கத்தில் ஜப்பானிய கடற்கரைக்கு வந்து சோ்ந்தது. அந்தக் கப்பலில் கடந்த மாதம் ஹாங்காங்கில் ஏறிய பயணி ஒருவருக்கு கொவைட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி வைத்திருந்தனா். அந்தக் கப்பலில் பயணிகள் மற்றும் பணியாளா்கள் உள்பட என மொத்தம் 138 இந்தியா்கள் இருந்தனா்.
கொவைட்-19 தொற்று இருந்ததால் அந்த கப்பலை வரும் 19-ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க ஜப்பானிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். இதையடுத்து அந்தக் கப்பல் துறைமுகத்துக்கு அனுமதிக்கப்படாமல் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த கப்பலில் பணியாற்றிய 2 இந்தியா்கள் உள்பட மொத்தம் 174 பேருக்கு கொவைட்-19 பாதிப்பு இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவருமே ஜப்பானிய சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தனி வாா்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.