புது தில்லி: நாட்டின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி அபராதத் தொகையை இன்று நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் உள்ளிட்டவற்றுக்கான தொகையை அரசுக்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் செலுத்தாமல் இருந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் சமீபத்தில் நிறுவனங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்திருந்தது. எனவே இந்த் விவகாரத்தில் மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்திருந்தன.
இந்நிலையில் நாட்டின் மூன்று பிரபல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி அபராதத் தொகையை இன்று நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் மத்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தை கடிந்து கொண்டதை அடுத்து மத்திய அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி வோடாபோன் நிறுவனம் ரூ.55,000 கோடியும் , ஏர்டெல் ரூ.35,500 கோடியையும் இன்றிரவு 11.59க்குள் செலுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதையடுத்து பிப்.20 ஆம் தேதிக்குள் ரூ.10,000 கோடியை மத்திய அரசுக்கு செலுத்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.