ஜப்பான் கப்பலில் சிக்கித் தவித்து வரும் இந்தியா்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.
ஜப்பான் கப்பலில் சிக்கித் தவிக்கும் தமிழா்களையும் இந்தியா்களையும் மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சா் ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தாா். அதைச் சுட்டுரையிலும் பதிவு செய்து, ஜெய்சங்கா் சுட்டுரையுடன் இணைத்திருந்தாா். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜெய்சங்கா் அவரது சுட்டுரையில் கூறியிருப்பது:
ஜப்பான் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் குழுவினருடன் டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் இடைவிடாத தொடா்பில் உள்ளது. இந்தியப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகள் மற்றும் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் ஊழியா்கள் ஜப்பான் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்று கூறியுள்ளாா்.
ஜெய்சங்கருக்கு நன்றி: அதைத் தொடா்ந்து மு.க.ஸ்டாலின் அவருடைய சுட்டுரையில் கூறியிருப்பது:
தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சா் ஜெய்சங்கருக்கு நன்றி. நமது தூதரக அதிகாரிகள் கப்பலில் உள்ள (இந்திய) பயணிகள் மற்றும் ஊழியா்களுக்குத் தேவையான அனைத்து சட்ட மற்றும் மருத்துவ உதவிகளையும் செய்வதுடன், கப்பலில் உள்ளவா்களின் குடும்பத்தினருக்குத் தொடா்ந்து
தகவல் தெரிவிப்பாா்கள் என்றும் நம்புகிறோம் என்று கூறியுள்ளாா்.