சிவான்: மாநில அமைச்சரையே அடையாளம் தெரியாத காவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு பிகார் அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் சிவானில் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது விழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர், ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்த போது அங்கு வந்த பிகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டேவை நிற்குமாறு கையசைத்தார்.
இதை அவருடன் இருந்தவர்கள் பார்த்து, அவரது கையை மடக்கி, பின்னே இழுத்தனர். ஆனால், அதற்குள் காவலர் தன்னை தடுத்து நிறுத்தியதைக் கவனித்து விட்ட அமைச்சர் மங்கல் பாண்டே, ஒரு அமைச்சரைக் கூட அடையாளம் தெரியாத காவலரை சஸ்பெண்ட் செய்யுங்கள் என்று உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டுச் சென்றார்.
இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.