தெலங்கானத்தில் திருமண வரவேற்பின் போது கடும் இரைச்சலுடன் இசைக்கப்பட்ட கச்சேரியால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தெலங்கானம், நிஜாமாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பின் போது இசைக்கப்பட்ட கச்சேரியின் போது மாப்பிள்ளை கணேஷுக்கு (25) உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருமண வரவேற்பு முடிந்து, திருமணம் நடந்த பிறகு, வெள்ளிக்கிழமை திடீரென கணேஷ் மயக்கமடைந்து விழுந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கணேஷின் பெற்றோர் கூறுகையில், திருமண வரவேற்பின் போது இசைக்கப்பட்ட கச்சேரியினால் அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டதாகவும், அதன் பிறகுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இசைக் கச்சேரியால் இளம் மாப்பிள்ளை மரணம் அடைந்திருப்பது உறவினர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.