ஆமதாபாத்: பிப்ரவரி 24ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகருக்கு வருகை தரவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க மாநில அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
அமெரிக்க அதிபரின் வருகையை முன்னிட்டு, ஆமதாபாத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் முன்னேற்பாடுகள் மற்றும் தூய்மை, அழகுப்படுத்தும் பணிகளுக்காக மாநில அரசு செலவிட திட்டமிட்டிருக்கும் தொகை ரூ.100 கோடியாம்.
இதில், டிரம்ப் பயணிக்க இருக்கும் சாலைகளை சீரமைக்க, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த, டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் விருந்தினர்களைத் தங்க வைக்க, நகரை அழகாக்க, தூய்மைப்படுத்த, சாலையெங்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்த என ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த செலவினத் தொகையில் ஒரு சிறு பகுதியை மத்திய அரசு ஏற்றுக் கொண்டாலும், பெரும்பான்மை தொகையை மாநில அரசே செலவிட வேண்டியதிருக்கும்.
பணிகளை மேற்கொள்ளவும், செலவினத் தொகையை வெளியிடவும், குஜராத் மாநில அரசு அனைத்துத் துறைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.