கட்சி, சாதி, மத பேதமின்றி தில்லி மக்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாடுபடுவேன் என்று தில்லி முதல்வராக பதவியேற்ற கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், மூன்றாவது முறையாக தில்லியின் முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். கேஜரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கேஜரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் மக்கள் முன்னிலையில் பேசிய கேஜரிவால், 'தில்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை.
கட்சி, சாதி, மத பேதமின்றி தில்லி மக்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாடுபடுவேன்.
நாட்டுக்கே தில்லி ஒரு உதாரணமாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஒவ்வொரு தில்லி வாசிக்கும் கிடைத்த வெற்றி. தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்.
தில்லி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. அதேபோன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவபர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. கல்வி, மருத்துவம் இரண்டும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
தில்லியின் முழு வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன்' என்று பேசினார்.