புது தில்லி: 3 ஜோதிர்லிங்கங்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மகாகால் விரைவு ரயிலில், கடவுள் சிவன் பெயரில் ஒரு முன்பதிவு இருக்கையை ஏற்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே.
வாராணசி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன், ஓம்காரேஸ்வர் ஆகிய மூன்று புனிதத் தலங்களையும் (ஜோதிர்லிங்கங்கள்) இணைக்கும் 'மகாகால் எக்ஸ்பிரஸ்' விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி முறையில் நேற்று தொடக்கி வைத்தார். இரவில் செல்லும் அந்த ரயில் தனியார் மூலம் இயக்கப்படுகிறது.
மகாகால் விரைவு ரயிலின் பி5 பெட்டியில் 64ஆம் இருக்கை, கடவுள் சிவனுக்காக நிரந்தரமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் கூறியுள்ளார்.
இதுவே முதல் முறை, கடவுள் சிவன் பெயரில் ஒரு இருக்கை நிரந்தரமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இருக்கையில் கோயிலின் படம் வரையப்பட்டு, பயணிகளுக்கு இதன் மூலம் அந்த இருக்கை கடவுளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிய வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயிலில், எப்போதும் பக்திப் பாடல்கள் ஒலிக்கும் வகையிலும், ஒவ்வொரு பெட்டிக்கும் இரண்டு தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும், முழுக்க முழுக்க சைவ உணவே வழங்கப்படுவதும் சிறப்பம்சங்களாகும். இது 3-ஏசிப் பெட்டிகளைக் கொண்டு, வாரத்தில் மூன்று நாட்கள் வாராணசி - இந்தூர் இடையே இயக்கப்படும்.