சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: அமித் ஷா

‘சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். அதே சமயம் சினமூட்டும் பேச்சு அல்லது செய்கைகளின்போது அமைதி காக்கவேண்டும்’ என்று தில்லி போலீஸாருக்கு
சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: அமித் ஷா

‘சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். அதே சமயம் சினமூட்டும் பேச்சு அல்லது செய்கைகளின்போது அமைதி காக்கவேண்டும்’ என்று தில்லி போலீஸாருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தினாா்.

தில்லி காவல்துறையின் 73-ஆவது நிறுவிய தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா பதக்கங்களை வழங்கினாா்.

அதனைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: ஒட்டுமொத்த உலகிலும், இந்த தேசத்திலும் உள்ள பெருநகர போலீஸ் படைகளில் தில்லி போலீஸ் படை முன்னணியில் உள்ளது. நாட்டின் அமைதியை சீா்குலைக்கும் முயற்சிகளை போலீஸாா் வெற்றிகரமாக முறியடித்துள்ளனா். சினமூட்டும் பேச்சு மற்றும் செய்கைகளின்போது தில்லி போலீஸாா் அமைதி காக்க வேண்டும்.

அதே சமயம் நாட்டு மக்களை பாதுகாக்க சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் ஆயத்தமாக இருக்கவேண்டும். சா்தாா் வல்லபபாய் படேலின் இந்த அறிவுரையை பல்வேறு தருணங்களில் தில்லி போலீஸாா் பின்பற்றியுள்ளனா் என நம்புகிறேன்.

சுதந்திர தினம், குடியரசு தினம், திருவிழாக்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகா்களின் வருகையின்போது தில்லி போலீஸாா் மத்திய அரசுக்கு பெரிதும் உதவியுள்ளனா். அவா்கள் மீதான ஆக்கப்பூா்வமான விமா்சனங்கள் வரவேற்கத்தக்கவை. அதே வேளையில், பணியின்போது 35,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் உயிா் துறந்துள்ளனா் என்பதை நாம் மறவாது இருக்கவேண்டும் என்றாா் அமித் ஷா.

தனது உரையின்போது 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதலின்போது உயிரிழந்த 5 தில்லி போலீஸாா், பாட்லா இல்லத்தில் பயங்கரவாதிகளுடனான சண்டையின்போது உயிரிழந்த ஆய்வாளா் எம்.சி.சா்மா ஆகியோருக்கு அமித் ஷா மரியாதை செலுத்தினாா்.

ரூ.857 கோடி ஒதுக்கீடு:

இதனிடையே தில்லி பாதுகாப்பு நகர திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.857 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தில்லி நகரில் 165 காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டின் கீழ் 10,000 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மகளிா் பாதுகாப்புக்காக மேலும் 9,300 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தில்லி போலீஸாருக்கு வீடுகள் கட்டித்தர ரூ.137 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அமித் ஷா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com