கன்னூர்: கேரள மாநிலம் தைய்யில் பகுதியில் உள்ள கடற்கரையோர பாறை இடுக்கில் இருந்து ஒன்றரை வயது சிறுவன் வியனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அவரது தாய் சரண்யா கைது செய்யப்பட்டார்.
இது குறித்து சரண்யாவிடம் (25) கன்னூர் நகர காவல்துறை 24 மணி நேரம் நடத்திய விசாரணையில், குழந்தையை தானே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். சரண்யாவுடன், அவரது கணவர் பிரணவ்வும் காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
திங்கட்கிழமை காலை பிரணவ், கன்னூர் நகர காவல்நிலையத்துக்கு வந்து, வீட்டில் தன்னுடன் உறங்கிக் கொண்டிருந்த மகனைக் காணவில்லை என்று புகார் அளிக்கிறார். அதே சமயம், வியனின் உடல் கடற்கரையோர பாறை இடுக்குகளில் இருந்து மீட்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுவன் வியனின் தலையில் காயம் இருந்ததைப் பார்த்து பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், தலையில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிய வந்தது.
இதையடுத்து, தாய் மற்றும் தந்தையிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையின் முடிவில், தனக்கு வேறொருவருடன் ஏற்பட்ட தொடர்பினால், தானே குழந்தையை கல்லால் அடித்துக் கொன்று உடலை கடலில் வீசியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தனது காதலன், பிள்ளையை பிரிந்து வந்தால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதால் இந்த முடிவை எடுத்ததாகவும் சரண்யா கூறியுள்ளார். காவல்துறையினர் சரண்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.