இரண்டு ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்த ஒரு காதல் ஜோடியின் காதல் கதை பல திருப்பங்களை திடீர் பிரச்னைகளையும் கண்டது. அதன்பின் ஒருவழியாக மகிழ்ச்சியான முடிவுக்கு வந்தது, அதாவது திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஆனால் அந்தத் திருமணம் 12 மணிநேரம் மட்டுமே நீடித்தது. இந்த வினோதமான சம்பவம் ஹமீர்பூர் மாவட்டத்தின் மெளடகா பகுதியில் நிகழ்ந்தது. அங்குள்ள பள்ளி மாணவி ஒருவர் தனது வகுப்பு தோழனான சந்தீப்பை இளம் வயது முதல் காதலித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் குறித்து அப்பெண்ணின் குடும்பத்தினர் அறிந்ததும் கோபம் அடைந்தனர். சந்தீப்பின் மீது பாலியல் குற்றம் சாட்டி மெளடகா போலீஸில் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உடனடியாக சந்தீப் கைது செய்யப்பட்டார், ஆனால் சில மணி நேரத்தில், அப்பெண் தனது புகாரைத் திரும்பப் பெற்றார். அவர் புகாரை வாபஸ் பெற்றதில் கோபமடைந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். அவர் நேராகச் சந்தீப்பிடம் சென்று தனது குடும்பத்தினரை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி சமாதானப்படுத்தினார்.
இளைஞனின் குடும்பத்தினர் முன்னிலையில் ஒரு கோவிலில் தம்பதியினர் திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டனர். ஆனால் செவ்வாயன்று, அந்தப் பெண் மீண்டும் தனது மனதை மாற்றி, 12 மணி நேர திருமணத்தை முறித்துக் கொள்ள முடிவு செய்தார்.
காதலியின் நிலையற்ற மனதால் கசப்படைந்த சந்தீப்பும் அவருடைய விருப்பங்களுக்கு ஒப்புக் கொண்டார்.
தம்பதியினர் மெளடகா கோட்வாலிக்குச் சென்று தங்கள் திருமணத்தை முறித்துக் கொள்வதாகக் கூறினார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப், "அவளுடைய முட்டாள்தனமான மனப்பான்மையால் நான் சோர்ந்து போயிருக்கிறேன், நான் அவளை நேசித்தேன், ஆனால் அவள் என்ன விரும்புகிறாள் என்று அவளுக்கேத் தெரியவில்லை. இந்த விஷயம் இத்துடன் முடிந்துவிட்டது, இனி நான் நிம்மதியாக இருப்பேன்" என்றார்.
காவல் துறையினர் அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அக்குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டனர்.