புது தில்லி: அசுத்தமான எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் தூய்மையான பெட்ரோல், டீசல் விற்பனை இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் யூரோ-4 கிரேடு ரக பெட்ரோல், டீசல் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திவிட்டு, தூய்மையான யூரோ-6 ரக பெட்ரோல் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.
தற்போது உலகில் குறிப்பிட்ட சில வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமே இந்த வகை பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தி வரும் நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது.
இதன் மூலம், வாகனத்தை இயக்கும் போது வெளியாகும் புகையில் இருக்கும் நச்சுகள் பெரும் அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே, பிஎஸ்-6 ரக பெட்ரோல், டீசல் விநியோகிப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டன.