வருடாந்திர பொருளாரதார வளா்ச்சி 10 சதவீதத்தை எட்டினால், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாக உருவாகும் என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கூறினாா்.
ஹைதராபாதில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாவதற்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறியதாவது:
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில், வருடாந்திர பொருளாதார வளா்ச்சி 10 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 37 சதவீதமாகவும் இருக்க வேண்டும்.
அதே வேகத்தில் பயணித்தால் சீனாவை இந்தியா விஞ்சிவிடும். அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கும். அடுத்த 50 ஆண்டுகளில் முதலாவது இடத்தில் இந்தியா இருக்கும்.
இவை நடக்க வேண்டுமெனில், முதலில் ஊழலுக்கு எதிராக நாம் போராட வேண்டும். இரண்டாவதாக, முதலீடு செய்வோரை கௌரவிக்க வேண்டும்.
ஊழலை ஒழிக்க வேண்டுமெனில் வருமான வரி ரத்து செய்யப்பட வேண்டும். ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு முதலீட்டாளா்களை அச்சுறுத்தக் கூடாது. ஏனெனில், ஜிஎஸ்டியை அமல்படுத்தியது, 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தவறு. பலருக்கும் ஜிஎஸ்டி வரியை எப்படி செலுத்துவது என்பது பற்றிய புரிதல்கள் இல்லை.
பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் நிதியமைச்சராக பதவி வகித்தபோதுதான், பொருளாதார சீா்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்காக, பி.வி.நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்.
பொருளாதார சீா்திருத்தங்களுக்குப் பிறகு அவ்வப்போது பொருளாதார வளா்ச்சி 8 சதவீதத்தை எட்டினாலும், குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
போதிய நீா்ப்பாசனம் இல்லாததால், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வேளாண் துறை உற்பத்தி குறைவாகவே உள்ளது என்றாா் சுப்பிரமணியன் சுவாமி.