ஹஸன் : கர்நாடக மாநிலம் ஹஸன் பேருந்து நிலையத்தில் கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, ஓடும் பேருந்திலேயே குழந்தைப் பேறு நடந்தது.
மடிக்கேரிப் பகுதியைச் சேர்ந்த ஹஸீனா, தனது தாய் பேகத்துடன் எச்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஹஸீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, பேருந்தை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர், ஆண் பயணிகள் அனைவரையும் பேருந்தில் இருந்து இறங்கச் சொன்னார்.
அப்போது பேருந்திலேயே ஹஸீனாவுக்கு அவரது தாய் மற்றும் சக பெண் பயணிகள் உதவியுடன், அழகான பெண் குழந்தை பிறந்தது.
கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஊழியர்கள், தாய் மற்றும் சேய்க்கு புதிய ஆடை மற்றும் போர்வைகளை வாங்கிக் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர்.
பின்னர் ஹஸீனா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.