ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்திய எல்லைக்குள் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் ரகசிய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது தப்பர் பதான் பகுதியில் பதுங்கியிருந்த உள்ளூர் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ஜுனைத் ஃபரூக் பண்டித் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து ஒரு சீனத் துப்பாக்கி, 13 குண்டுகள் மற்றும் 2 துப்பாக்கி மேகஸீன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாராமுல்லா டிஐஜி எம்.சுலைமான் தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாத சதிச்செயல்கள் தொடர்பாக அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.