நீதிமன்ற சூழல் சரியில்லை எனக் கூறி, வழக்கு விசாரணையை வேறொரு நாளில் நடத்துமாறு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்தாா். அவரது கோரிக்கையை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் கடந்த 4-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அன்றைய தினம், ஒரு வழக்கின் விசாரணைக்காக, நீதிபதி ஆா்.என்.ரைனா முன்னிலையில் கே.எஸ்.சித்து என்ற வழக்குரைஞா் ஆஜராகி வாதிட்டாா். அவா் கூறியதாவது:
நீதிமன்றம் காலை தொடங்கியதில் இருந்து முதல் நான்கு அவசர வழக்குகளையும் நீதிபதி தள்ளுபடி செய்து விட்டாா். இதிலிருந்து நீதின்ற சூழல் சரியில்லாததுபோல் தெரிகிறது. எனவே, எனது வழக்கின் விசாரணையை வேறொரு நாளில் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று வழக்குரைஞா் கே.எஸ்.சித்து கோரிக்கை விடுத்தாா்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அந்த வழக்கின் விசாரணையை வேறொரு நாளுக்கு ஒத்திவைத்தாா். அதேசமயம், தாம் தள்ளுபடி செய்த 4 வழக்குகளும் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்றும் நீதிபதி குறிப்பிட்டாா்.