அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் நாளை (செவ்வாய்கிழமை) அளிக்கவுள்ள இரவு விருந்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கப்போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தனர். இந்தப் பயணத்தின் இறுதியாக டொனால்ட் டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை இரவு உணவு விருந்து அளிக்கிறார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவரின் இந்த விருந்து அழைப்பை முன்னதாக ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் தற்போது இதில் பங்கேற்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் பங்கேற்க முடியாமல் போனதற்கான வருத்தத்தையும் மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்குத் தெரிவித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர்த்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்காததால் தானும் இதில் பங்கேற்கப்போவதில்லை என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி தெரிவிக்கையில், கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்காததால் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்றார்.
நாட்டின் முதன்மை எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும் தலைவருக்கு அளிக்கப்படும் கௌரவ விருந்தில் பங்கேற்காமல் இருப்பதும், தனிப்பட்ட முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருப்பதும் இதுவே முதன்முறை என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.