புது தில்லியில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
தலைநகர் தில்லியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஆமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி அவசரமாக புது தில்லி விரைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி யமுனா விஹார் பகுதியில் நடைபெற்று வந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல், காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத்தில் இருந்து ஆக்ரா சென்றுவிட்டு இன்று மாலை புது தில்லி வரவிருக்கும் நிலையில், தலைநகரில் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆமதாபாத்தில் இருந்து பிரதமர் மோடி அவசரமாக புது தில்லி விரைவதாகக் கூறப்படுகிறது.