வடகிழக்கு தில்லி பகுதியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத், மௌஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவானவர்களும், எதிரானவர்களும் இடையிலான மோதல் வன்முறையானதில் தலைமைக் காவலர் உட்பட 7 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தில்லி ஜிடிபி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் சுனில் குமார் முன்பு தெரிவிக்கையில், "இன்று 4 பேர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டனர். நேற்று 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது" என்றார்.
இதன்பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் தெரிவிக்கையில், "மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் காயமடைந்த 150 பேர் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
இந்நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, சிஏஏ-வுக்கு எதிராக ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு திடீரென சாலை மறியல் தொடங்கியது. மூவர்ணக் கொடியை ஏந்தியவாறு சுமார் 500 பெண்கள் பங்கேற்ற இப்போராட்டம் திங்கள்கிழமையும் தொடர்ந்தது. இதனிடையே, இப்போராட்டத்துக்குப் பதிலடியாக ஜாஃப்ராபாத் அருகில் உள்ள மௌஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவுப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர இருதரப்பும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு, வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால், இருதரப்பினருக்கிடையிலான இந்த மோதல் வன்முறையானது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அந்தப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.