2020 ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மார்ச் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 16ஆம் தேதி வேட்புமனு சரிபார்ப்பு பணி நடைபெறும். 18ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள்.
மார்ச் 26ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும் மாநிலங்களவைத் தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதையடுத்து மாலை 5 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, டி.கே.ரங்கராஜன், முத்துக்கருப்பன், கே.செல்வராஜ், விஜிலா சந்தியானந்த் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
எனவே தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 3 உறுப்பினர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது.