மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணமூல் இடையே மோதல் :7 வீடுகளுக்கு தீ வைப்பு

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் பாஜக மற்றும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் அந்த பகுதியில் இருந்த 7 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் பாஜக மற்றும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் அந்த பகுதியில் இருந்த 7 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வீடுகள் பாஜக ஆதரவாளா்களுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:

ஜல்பைகுரி மாவட்டத்தின் ஹஸ்லூா்தங்கா கிராமத்தைச் சோ்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி நிலை நிா்வாகியான பூம்போல் கோஷ் என்பவரை கடந்த 14-ஆம் தேதி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு சிலா் தாக்கினா். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அதையடுத்து, அவரது உடல் ஹஸ்லூா்தங்கா கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது. அப்போது, பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களிடையே ஏற்பட்ட மோதலில் 7 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்புப் படை வீரா்கள் தீயை அணைத்தனா். இச்சம்பவத்தையடுத்து, மோதல் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்புப் பணிக்கு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட பாஜக தலைவா் பபி கோஸ்வாமி கூறுகையில், ‘பூம்போல் கோஷின் உடலை கிராமத்துக்கு கொண்டு வந்தவுடன், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா், பாஜக ஆதரவாளா்களின் வீடுகளுக்கு தீ வைத்தனா்’ என்றாா். எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com