தில்லி மக்கள் அமைதி காக்க வேண்டும். அப்போதுதான் இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக புதன்கிழமை அதிகரித்துள்ளது, 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தில்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை பதிவிட்டுள்ளதாவது,
தில்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. போலீஸ் மற்றும் இதர பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து அமைதி மற்றும் இயல்பு நிலையை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அமைதியும், சமூக நல்லிணக்கமும் நமது நெறிமுறைகளில் மையமானவையாகும். அமைதியையும், சகோதரத்துவத்தையும் பேணுமாறு தில்லியில் உள்ள எனது சகோதர, சகோதரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்தச் சூழலிில் அமைதி காப்பது முக்கியமாகும். அப்போதுதான் இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.