புது தில்லி: தலைநகர் புது தில்லியில் திட்டமிட்டே வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா கூறியுள்ளார்.
புது தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தில்லியில் திட்டமிட்டே வன்முறை சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. தில்லி வன்முறை தொடர்பாக உளவுத் துறைக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்கவில்லையா? தில்லியில் நடைபெற்று வரும் வன்முறைக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்.
துணை ராணுவப் படையினரை முன்கூட்டியே அழைக்காதது ஏன் என்றும் சோனியா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். தில்லியில் வன்முறையைத் தவிர்க்கும் பணியில் முதல்வர் கேஜரிவாலும் தோல்வியடைந்துவிட்டார்.