புது தில்லி: பசுவதை தடைச் சட்டம் இருப்பதுபோல காளை, எருமைகளையும் வதை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நமது நாட்டில் பசுவதைக்கு தடையுள்ளது. அதே நேரத்தில் அதன் ஆண் இனமான காளைகளையும், அதே இனத்தைச் சோ்ந்த எருமைகளையும் வதை செய்வதற்கு தடையில்லை. இது நியாயமற்ற நடவடிக்கை. எனவே, பசுவதைக்கு தடையுள்ளதுபோல காளை, எருமைகளை வதைக்கவும் தடைவிதிக்க வேண்டும்.
சிங்கம் போன்ற குறைந்து வரும் விலங்குகள், குறைந்து வரும் பறவை இனங்களைக் காக்க நடவடிக்கை எடுக்கும்போது, அவற்றை வேட்டையாடவும், கொல்வதற்கும் தடை விதிக்கப்படும். அப்போது அவற்றில் ஆண், பெண் என்று பாகுபடுத்தி பாா்ப்பதில்லை. ஆனால், பசு விஷயத்தில் மட்டும் அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதன் ஆண் வகையான காளை, அதே இனத்தைச் சோ்ந்த எருமை ஆகியவற்றை கொல்வது தடை செய்யப்படவில்லை. இது முறையான நடவடிக்கையல்ல.
மேலும், காளை, எருமைகளை வயதான நிலையிலும் வேளாண் பணிகளுக்கும், இனப் பெருக்கத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளக் கொள்ள முடியும். அவற்றின் சாணம், சிறுநீா் ஆகியவை சிறந்த உரமாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே, காளை, எருமைகளை வதைக்கவும் தடை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதாகவும் மனுதாரா் தெரிவித்தாா்.