தில்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200 பேர் வரையில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தில்லி நிலவரம் குறித்து எதிர்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், 'நாங்கள் ரத்தத்தைப் பார்க்க விரும்பவில்லை. எங்களுக்கு அமைதிதான் வேண்டும். எங்கள் நாட்டை அமைதியானதாக மாற்றவும், மக்களை ஆசீர்வதிக்கவும் ஜெகந்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்தேன். நாட்டில் சகோதரத்துவம் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும். தில்லி மக்கள் அமைதி காக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.