மும்பை: 2008 நிதியாண்டுக்குப் பிறகு உலக அளவில் பங்குச் சந்தைகளில் மிக மோசமான சரிவு காணப்பட்ட நாளாக இன்று அறியப்படுகிறது. இன்றைய தினத்தை கருப்பு வெள்ளி என்று இந்திய பங்குச் சந்தை கருதுகிறது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிக மோசமான விளைவுகளை பங்குச் சந்தைகள் சந்தித்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தின் போது மும்பைப் பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிந்து 38,297.29 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டில் அடங்கிய 30 நிறுவனங்களின் பங்குகளும் இன்று சரிவையே சந்தித்தன.
சென்செக்ஸ் குறியீட்டில் டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல், மகிந்திரா அன்ட் மகிந்திரா, எச்சிஎல், டெக், பஜாஜ் பினான்ஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
தேசியப் பங்குச் சந்தை குறியீடு நிப்ஃடி 432 புள்ளிகள் சரிந்து 11,202 ஆக இருந்த போது வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசியப் பங்குச் சந்தையில் இடம்பெற்ற 50 நிறுவனப் பங்குகளுமே சரிவைக் கண்டன.
சீனாவில் எரிபொருள் பயன்பாடு பெருமளவுக்கு குறைந்ததன் காரணமாக, கச்சா எண்ணெய் விலையிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
சீனாவைத் தவிர உலக நாடுகளுக்கும் கரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக, முதலீட்டார்களின் மன மாற்றமே உலக அளவில் பங்குச் சந்தைகளில் கடும் சரிவைச் சந்திக்க காரணமாக உள்ளன.
சீனாவில் மட்டும் அல்லாமல் தற்போது தென்கொரியா, ஈரான், இத்தாலி மற்றும் ஜப்பானிலும் வேகமாகப் பரவி வருகிறது. ஜெர்மனி, பிரேசில் நாடுகளிலும் கரோனா பரவிவிட்டது.