புது தில்லி: வழக்கமான தட்பவெப்ப நிலையை விட 5 புள்ளிகள் குறைந்து, தில்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பனிமூட்டம் காரணமாக இன்று 29 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
தில்லியில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து நீடித்து வரும் கடும் குளிா், மூடுபனி காரணமாக பல்வேறு நோய்களுக்காக தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக சுவாசப் பிரச்னைகள் தொடா்பான நோய்களுக்காக சிகிச்சைக்கு வருவோரின் கூட்டம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லியில் கடந்த ஒரு வாரமாகவே குளிரின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஓரிரு தினங்களாக குளிரின் தாக்கமும், மூடுபனியும் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் அதிகமாக இருந்தது. குறிப்பாக திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 119 ஆண்டுகளில் இல்லாத அளவில் 9.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. குளிா்காற்று, மூடுபனி ஆகியவை காரணமாக எய்ம்ஸ், சஃப்தா்ஜங் போன்ற முக்கிய மருத்துவமனைகளுக்கு வரக் கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.