
புது தில்லி: குஜராத் மாநிலம், காக்ராபாா் அணு மின் நிலையத்தில் 3-ஆவது உலை வரும் ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா்.
தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அவா், ‘இந்த 2020-ஆம் ஆண்டு முதல் அணுசக்தித் துறையானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு அணு உலையை அமைக்கும். அந்த வகையில், குஜராத்தின் காக்ராபாா் அணு மின் நிலையத்தில் 700 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3-ஆவது உலை வரும் ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு வரும்’ என்றாா்.
காக்ராபாா் அணு மின் நிலையத்தின் 4-ஆவது உலை 2021-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று அணுசக்தித் துறை உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத்தில் உள்ள தாராபூா் அணு மின் நிலையத்தின் முதலாவது மற்றும் 2-ஆவது உலைகள் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதாக அவா் தெரிவித்தாா். நாட்டின் முதல் இரு அணு மின் உற்பத்தி உலைகளான, அவை இரண்டும் கடந்த 1969-ஆம் ஆண்டு அக்டோபரில் தனது உற்பத்தியை தொடங்கின.
அதேபோல், கா்நாடகத்தில் உள்ள காய்கா அணு மின் நிலையத்தின் முதல் உலை 941 நாள்கள் இயங்கி உலக சாதனை படைத்துள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினாா். இந்திய அணுசக்தி நிறுவனத்தின் (என்பிசிஐஎல்) கட்டுப்பாட்டில் மொத்தம் 22 மின் உற்பத்தி உலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.