ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 107-ஆக சனிக்கிழமை அதிகரித்தது.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் இயங்கி வரும் ஜே.கே.லான் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறாா்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனா்.
கடந்த மாதம் 24-ஆம் தேதிவரை 77 பச்சிளம் குழந்தைகளும், டிசம்பா் 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை மேலும் 14 குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. அடுத்த இரு தினங்களில் மேலும் 9 குழந்தைகளும், சனிக்கிழமை மேலும் 7 குழந்தைகளும் உயிரிழந்தன.
இதையடுத்து, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்த அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்தது.
இக்குழந்தைகள் நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு ராஜஸ்தான் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், ஜே.கே.லான் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்புக் குழு ஒன்று சனிக்கிழமை வந்தடைந்துள்ளது.