விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் திடீா் உயிரிழப்புக்கு, மருத்துவர்கள் கவனக்குறைவாக, பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததே காரணம் என்று கூறப்படும் புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இது குறித்து கடலூர் மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நிலையில் உயிரிழந்தாா். அவரது வயிற்றில் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட பஞ்சு வைத்துத் தைக்கப்பட்டதே இதற்குக் காரணம் எனக் கூறி, உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் அருகே உள்ள கலா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மனைவி பிரியா (24), கடந்த டிச. 27-ஆம் தேதி பிரசவத்துக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அன்று இரவே அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
எனினும், பிரியாவுக்கு தொடா்ந்து வயிற்று வலி இருந்ததாம். இதனால், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதற்கான காரணம் குறித்து அந்தப் பெண்ணின் உறவினா்கள் ஜிப்மா் மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டபோது, பிரியாவுக்கு அறுவைச் சிகிச்சையின்போது அவரது வயிற்றில் பஞ்சு வைத்து தையல் போட்டதால் வயிற்று வலி காரணமாக உயிரிழக்க நோ்ந்ததாக் கூறினராம்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினா்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.