தகவல் தொலைதொடர்புத்துறையின் பிஎஸ்என்எல்-ஐ நாட்டின் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக மாற்றுவதே எனது இலக்கு என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
தொலைதொடா்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சென்னை- அந்தமான் தீவுகளுக்கு இடையே ரூ. 1,224 கோடியில் சுமாா் 2,250 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிப்பதற்கான திட்டப் பணியை மத்திய தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் சென்னையில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்த திட்டம் ஜூன், 2020 முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
இந்தியாவில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக பிஎஸ்என்எல்-ஐ மாற்றுவதே எனது இலக்கு. முன்பு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போதும் பிஎஸ்என்எல் சேவை தங்குதடையின்றி கிடைத்தது. இதனால் மீட்புப் பணிகள் தோய்வின்றி நடைபெற உதவியாக இருந்தது. நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது அங்கே சிக்கியிருந்த இந்தியர்களுக்கு உதவும் விதமாக பிஎஸ்என்எல் இலவச சேவையை வழங்கியது.
பிஎஸ்என்எல் தொலைதொடர்புத்துறை மட்டும் அல்ல, நாட்டின் அசைக்க முடியாத சொத்துக்களில் ஒன்றாகும். கடந்த 2014-ஆம் ஆண்டில் நான் மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபகரமாக இயக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். பிஎஸ்என்எல் நிறுவனத்தை முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக மாற்ற நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
78 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும், 15 ஆயிரம் எம்டிஎன்எல் ஊழியர்களுக்கும் மிகச் சிறந்த சலுகைகளுடன் கூடிய விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. நாட்டின் வரலாற்றிலேயே பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மிகச்சிறந்த ஓய்வுத் திட்டச் சலுகை என்று தெரிவித்தார்.
சென்னை, அந்தமான் இடையே தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தைத் தொடா்ந்து, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து லட்சத்தீவுகளுக்கு இடையே சுமாா்
ரூ.1,000 கோடி செலவில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இத்திட்டமும், பிஎஸ்என்எல் நிறுவனம் மூலமே செயல்படுத்தப்பட உள்ளது.