காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தில் இந்திய ராணுவத்தின் சுமைதூக்கும் ஊழியர்கள் இருவர் பலியாகினர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது முதல் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்பூர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சுமைதூக்கும் ஊழியர்கள் இருவர் பலியாகினர்.
மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.