பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) என்ற பேச்சுக்கே இடமில்லை என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான 126 அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக பிகாரில் சிறப்பு பேரவைக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) கூடியது.
இந்நிலையில், விவாதங்களுக்கு மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் என்ஆர்சி குறித்த கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் நிதிஷ் குமார், "மக்கள் விரும்பினால் இவ்விவகாரம் குறித்து பேரவையில் விவாதிக்க நாங்கள் தயார். என்ஆர்சியைப் பொறுத்தவரை அதை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுக்கே இடமில்லை. இது அஸ்ஸாம் மாநிலத்துக்கானது மட்டுமே. பிரதமரும் இதை திட்டவட்டமாகக் கூறியுள்ளார்" என்றார்.
முன்னதாக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இருஅவையிலும் வாக்களித்தது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அக்கட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் இந்த நடவடிக்கையை வெளிப்படையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.